கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையில் பணியிடங்கள் கலைக்கப்படுவதை தவிர்க்க வலியுறுத்தி கோவில்பட்டி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரையை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கப்பட எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன்,அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் பிரான்சிஸ், ஒன்றிய செயலாளர் முத்துராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில், வட்டாட்சியர்கள் ராஜ்குமார், மணிகண்டன், ராமகிருஷ்ணன், வட்டாரச் செயலாளர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
