• June 7, 2025

மதுரை அதிமுக கூட்டத்தில் அடிதடி கைகலப்பு: முன்னாள் அமைச்சர்கள் முன் மோதிகொண்ட தொண்டர்கள்

 மதுரை அதிமுக கூட்டத்தில் அடிதடி கைகலப்பு: முன்னாள் அமைச்சர்கள் முன் மோதிகொண்ட தொண்டர்கள்

அதிமுக கிளை,வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய ‘கள ஆய்வு குழு’ ஒன்றை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

அதன்படி மதுரை மாநகர அதிமுக செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் மதுரை சந்தை பேட்டை பகுதியிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கள ஆய்வு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். வட்ட, பகுதி செயலாளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் கள ஆய்வுக்குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோரிடம் தங்களுடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த பைக்காரா செழியன், வைகை பாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மேடையில் ஏறி பேசினர்.

அப்போது ஆத்திரமடைந்த செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் சிலர், அவர்களை மேடையை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அடிதடி மற்றும் கைகலப்பாக மாறியது. இதனால் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்தும், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜுவின் செயல்பாடுகளில் அதிருப்தி குறித்தும் தெரிவிக்க வந்த கட்சியினர், இருதரப்பாக மோதி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, நெல்லை, கும்பகோணத்தில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டங்களின்போது, அதிமுகவினர் இடையே மோதல் வெடித்த நிலையில், மதுரையில் தற்போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர், “எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சனை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். அதிமுகவில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது, அவ்வளவு தான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர்; அதை தருவதாக சொன்னோம். பிரச்சனை முடிந்து விட்டது. அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கி விட்டனர்” என தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *