எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க சென்னை ஐகோர்ட் தடை

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2004-ல் தனது பாட்டியின் மறைவுக்கு பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005-ம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருகிறது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும், தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வருவதாகவும். கர்நாடக இசை உலகில் தன் நம்பக தன்மையை கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படி கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருது வழங்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, இந்த விருதை டிசம்பரில் நடைபெறும் 98-வது ஆண்டு விழாவில், கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இறை நம்பிக்கை கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை அற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005-ம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம் தான் விருது வழங்குவதாகவும், இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.
