நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையை உலுக்கியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் (நவம்பர் 16) ஆம்ஸ்ட்ராங் பற்றிய ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ரஞ்சித், நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதை வெளியில் கொண்டுவர வேண்டிய தேவையிருக்கிறது. 2 ரவுடி கும்பல்களின் மோதல்கள் என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.
இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக கண்டித்து கேள்விகளை எழுப்புவதாக பலரும் கூறுகின்றனர். திமுக-அதிமுக என எந்த அரசாக இருந்தாலும் எங்கள் உரிமைகளை, கேள்விகளை நாங்கள் பயமின்றி கேட்போம்.
இங்கு ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தோழர்கள் நிறைய பேர் இருக்கீங்க. ஒரு தெளிவான திட்டத்துடன் நாம் 2026 தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி, வெற்றிபெற வைக்க நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும். தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். நாம யாருன்னு காட்டணும்.
ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்று எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அரசியல் அதிகாரத்தை பெறுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அது தான் ஆம்ஸ்ட்ராங்-க்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். களத்தில் இறங்கி வேலை செய்ய நான் தயார். ஜெயிக்கிறோமோ – தோல்வியடைகிறோமோ அது முக்கியமில்லை. சண்டை செய்யணும் அது தான் முக்கியம். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். வட தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு நமக்கு உண்டு. அதை மீண்டும் நிரூபித்து காட்டுவோம். இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
