சீனாவில் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் சரமாரி கத்திக்குத்து: 8 பேர் பரிதாபமாக பலி

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் வுக்ஸி நகரில் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி கல்லூரியில் படித்து வந்த 21 வயது மாணவர் ஒருவர் திடீரென ஆவேசம் அடைந்து சரமாரியாக கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்., கத்திக்குத்தில் ஈடுபட்ட 21 வயதான மாணவர் தனது ஆண்டு தேர்வில் தோல்வியடைந்து பட்டம் பெற தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், இதனால் மன அழுத்தத்தில் சோகமாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தவர், திடீரென ஆவேசமடைந்து கல்லூரி வளாகத்தில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக கத்தியால் தாக்குதல் நடத்தி வெறித்தனமாக குத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் 12-ம் தேதி இதே போன்று சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக தறிகெட்டு ஓடிய கார் ஒன்று மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
