உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பரிதாபமாக பலி

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார்,
மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வெள்ளி கிழமை (நவம்பர்.15) இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவின் வெளி பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவின் வெளிப்புற பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:-
ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியின் என்ஐசியூவில் நடந்த விபத்தில் குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும். இந்த விவகாரம் குறித்து 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்ட ஆணையர் பிமல் குமார் துபே மற்றும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கலாநிதி நைதானி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
