சென்னையில் அரசு மருத்துவமனையில் துணிகரம்: பணியில் இருந்த டாக்டருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்றுகாலை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மற்ற டாக்டர்கள் விரைந்து வந்து கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜியை அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
‘சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆவார். பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து டிஷ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர் ஏற்கனவே இதே மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் கத்தி வைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி விட்டார்’ இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
