இராஜராஜ சோழன் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது: வைரமுத்து

இராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, இராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் வலைதளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது:-
மாமன்னன் ராசராசனின் 1039-ம் சதய பெருவிழா தஞ்சை பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்று பரவசமும் வாள் வினையால் அகண்ட தமிழகம் கண்ட பேரரசனின் பேரன் என்ற பெருமிதமும் என்னை பேசவைத்தன.
ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசனின் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது, அற சீற்றத்தோடு பேசினேன்:
ஆலய வளாகத்திற்குள்ளே இறை உருவங்களைத் தவிர மனித படிமங்கள் திகழ கூடாது என்று ஆகமவிதிகள் அறிவிப்பதாய் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கருதலாம். அதற்கொரு மறுப்பை அறிவிக்கிறேன். தேவார பதிகங்களை மீட்டெடுத்த தமிழ் மாமன்னன் தேவார மூவராகிய அப்பர், சம்பந்தர், சுந்தரரின் செப்பு திருமேனிகளை ஆலத்தியத்தினுள்ளே எழுப்பி வழிபட செய்தான்.
அந்த மனித படிமங்களை எழுப்ப எந்த ஆகமவிதி இடம் தந்ததோ, அதே ஆகமவிதி ராசராச பெருமன்னனின் திருச்சிலையை ஆலய வளாகத்துக்குள் அமைக்க இடந்தராதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ஆழ்ந்து நோக்குமா ஆவன செய்யுமா ஒன்றிய அரசின் தொல்லியல் துறை என்று பேசினேன்.
தக்கவர்க்கு ராசராசன் விருது வழங்கினோம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்டர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பாபாஜி ராஜா போன்ஸ்லே, தலைவர் செல்வம், தஞ்சை செழியன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி முதலியோர் உடனுள்ளனர். இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
