ஜப்பானில் நடந்த நெப்போலியன் மகன் திருமணம்; தாலி கட்டும் போது நெகிழ்ச்சி சம்பவம்

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ். தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரால் எழுந்து நடக்க முடியாது. வீல்சேர் உதவியோடு தான் அவர் தன்னுடைய வேலைகளை செய்து கொள்கிறார்.
தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பலருடைய நிலை இதுபோல இருந்தாலும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு வாழ்க்கைத் துணை முக்கியம் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மகனுக்காக வரன் பார்த்து இருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பெண்ணோடு எங்கேஜ்மென்ட் செய்து வைத்திருந்தார்.
நெப்போலியன் மகன் தனுஷும், மணப்பெண் அக்சயாவும் செல்போனில் பேசி பழகி இருவருக்கும் மனம் ஒத்துப்போன பிறகு இரண்டு குடும்பத்தினரும் இவர்களுடைய திருமண ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஜப்பானில் இன்று திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தின் போது மாப்பிள்ளை தனுஷ் வீல்சேரில் அமர்ந்திருக்கும் போது அவர் பக்கத்திலேயே மணப்பெண் அக்சயா நின்று கொண்டிருந்தார். தாலி கட்டும் நேரத்தில் தனுஷால் கைகளை தூக்கி தாலி கட்ட முடியாது என்பதால் அவருடைய அம்மா உதவி செய்திருந்தார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த உறவினர்கள் நண்பர்கள் பூக்களை தூவி மணமக்களை ஆசீர்வாதம் செய்ததும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நெப்போலியன் கண்கலங்கி அழுதுவிட்டார். அப்போது நெப்போலியனின் மருமகள் அக்சயா சிரித்த முகமாக கைகூப்பி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார்.
தனுஷால் கைகளை முழுமையாக தூக்கி மாலை போட முடியாது என்பதால் தலை குனிந்து அக்சயா மாலையை வாங்கி கொண்டது, பிறகு மேடையிலேயே தனுஷின் மாலையை சரி செய்தது போன்ற செயல்கள் பார்ப்போரை நெகிழ வைத்தது..
நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்சயாவுக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
