கங்குலியால் தான் இந்த சீசன் விளையாட முடிவு செய்தேன்: விருத்திமான் சஹா

விருத்திமான் சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2021-ல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதே இவரின் கடைசி டெஸ்ட் போட்டி.
சமீபத்தில் சஹா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த ரஞ்சி சீசனில் பெங்காலுக்காக ஆடி வரும் இவர், சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
சஹா இந்த சீசன் விளையாடும் மனநிலையிலேயே இல்லை என்றும், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி வற்புறுத்தியதால் தான் விளையாட முடிவு செய்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து சஹா கூறியதாவது:- “நான் இந்த சீசன் விளையாடும் மனநிலையிலேயே இல்லை. ஆனால் சவுரவ் கங்குலியும் என் மனைவியும் என்னை வற்புறுத்தினார்கள். 2 ஆண்டுகள் திரிபுரா அணிக்காக ஆடி விட்ட நிலையில், பெங்கால் அணியில் என் கரியர் முடியவேண்டும் என்று கூறினார்கள். அதனால் தான் நான் இந்த சீசன் விளையாட முடிவெடுத்தேன்” என்று சாஹா தன் ஓய்வு பற்றி கூறியுள்ளார்.
கங்குலியை போலவே சாஹாவும் பெங்காலை சேர்ந்தவர் என்பதால், சாஹா தன் கரியரை பெங்கால் அணியோடு முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்திருக்கிறார் கங்குலி. கடந்த 2 சீசன்களாக திரிபுரா அணிக்காக சாஹா விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
