எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி: நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி படவாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி ஊனுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் துபாயில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2023-ம் ஆண்டு டிசம்பர் 14,15 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையென கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கையை சமர்பித்துள்ளது.
இதனால், நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலி என உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பலரும் நிவின் பாலி பாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், நிவின் பாலி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
இதைக்கண்ட ரசிகர்கள், நிவினுக்கு ஆதரவாகவும் அவர் மீது களங்கம் விளைவித்தவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
