அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 2026 தேர்தல் தொடர்பாக ஆலோசனை



அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி வருகிறார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறியதாவது,
ஆலோசனை கூட்டத்தில், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
டி.வி.யில் தினந்தோறும் தங்கம் விலை நிலவரத்தை பற்றி பார்ப்பது போல, கொலை கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்திகள் தான் ஒளிபரப்பாகிறது. அந்த அளவிற்கு குற்ற சம்பவங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதியின் புகழ் பாடுவதிலும், தனது மகன் உதயநிதி ஸ்டாலினின் புகழ் பாடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறாரே தவிர விலைவாசியை கட்டுப்படுத்துவதிலோ, மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலோ கவனம் செலுத்துவதில்லை.
எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசின் மக்கள் விரோத போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் பொதுமக்களிடையே எடுத்துச் சென்று சட்டமன்றத் தேர்தலை அதிமுக சந்திக்கும்.
திமுகவின் கூட்டணி பலம் குறித்த கேள்விக்கு, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்போது அக்கட்சியில் பிரச்சினைகள் வெடிக்கும். மேலும் தேர்தல் நேரத்தில் திமுகவின் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை கடந்த கால வரலாற்றை பார்த்து புரிந்து கொள்ளலாம் என்று பதில் அளித்தார்..
தொடர்ந்து பேசிய டி.ஜெயக்குமார் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட வரலாற்றை சீமான் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார்., சட்ட வல்லுனர்களை வைத்து அந்த வழக்கின் விவரங்களை சீமான் தெரிந்து கொள்வது நல்லது
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவதும் அல்லது அத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையுமே ஸ்டாலின் அரசு குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருகிறது. திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
