விஜய் வருகையால் சீமானுக்கு அச்சம் எழுந்துள்ளது – எம்பி மாணிக்கம் தாகூர்

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் விமர்சித்து வருகிறார். விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே வாக்களித்துவிட்டு, மறுமுறை வேறொரு அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக சீமான் திகழ்கிறார்.
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுகின்ற கட்சியை மட்டுமே விமர்சித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம். அதை விஜய் கையிலெடுத்துள்ள நிலையில், அதனை ஏற்று கொள்வார்களா., இல்லையா., என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 4- லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக கொள்கைக்கும், நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள கட்சி கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட எச்.ராஜாவின் அறியாமையை எடுத்துக்காட்டுகிறது.
திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி சகோதரத்துவத்துடன் நீண்டகால உறவிலிருந்து வரும் பட்சத்தில் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
