• June 8, 2025

8 மாத குழந்தையின் நுரையீரலில் எல்இடி லைட்: சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை

 8 மாத குழந்தையின் நுரையீரலில் எல்இடி லைட்: சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையை இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்களால் அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. எக்ஸ்ரேவில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பதாக தென்பட்டது.

இதனையடுத்து அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 1-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இடது நுரையீரலில் மூச்சு குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளது ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.

8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது.

எனவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்த பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த பொருள் கடந்த 2-ம் தேதி அன்று அகற்றப்பட்டது. அகற்றிய பின் இரும்பு ஊசிபோன்று ஸ்கேன் பரிசோதனையில் தென்பட்ட பொருள் குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் என உறுதி செய்யப்பட்டது.

இச்சிகிச்சைக்கு பின் குழந்தை பூரண நலம் பெற்று கடந்த 4-ம் தேதி நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவ குழுவை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *