கடைசி டெஸ்ட்: இந்திய பவுலர்கள் ஆதிக்கம் – தடுமாறும் நியூசிலாந்து

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 263 ரன்களை சேர்த்தது. சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 90 ரன்களை சேர்த்தார். ரிஷப் பந்து 60 ரன்களுக்கு அவுட்டானார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்தின் கேப்டன் டாம் லேதம் 1 ரன்னுக்கு போல்டாகி வெளியேறினார். டெவோன் கான்வே 22 ரன்களில் கிளம்பினார். ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் நடையை கட்டினார். வில் யங் மட்டும் பொறுப்பாக ஆடி 51 ரன்களை சேர்க்க, டேரில் மிட்ஷெல் 21 ரன்கள், டாம் ப்ளண்டெல் 4 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 26 ரன்கள், இஷ் சோதி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மேட் ஹென்றி 10 ரன்களில் அவுட்டாக 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்த 171 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் நியூசிலாந்து இந்திய அணியை விட 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-ம் நாளில் இந்திய பவுலர்களின் ஆதிக்கத்தை காண முடிந்தது. ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
