கேரளாவில் ரெயில்மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரெயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டத்தை சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு நபர் என மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள். வேலையில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விரைவு ரெயிலை பொருத்தவரை ஷோரணூர் பகுதியில் நிறுத்தம் கிடையாது. எனவே அதிவேகமாக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ரெயில் சென்றபோது ஊழியர்கள் கவன குறைவாக நின்றிருக்கலாம் எனவும் இதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரெயில்வே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
