சென்னை அணிக்கு தோனி மிக முக்கியமான வீரர்: பஞ்சாப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்

சிஎஸ்கே அணிக்காக மீண்டும் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். அவரை சென்னை அணி நிர்வாகம் ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறது. அன்-கேப்ட் வீரராக தோனியை தக்க வைத்ததன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு மெகா ஏலத்திலும் சாதகம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங் பேசுகையில், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஏராளமான சுவாரஸ்யமான வீரர்கள் பங்கேற்கிறார்கள். சில இந்திய வீரர்களை அந்த அணி நிர்வாகங்கள் ரிலீஸ் செய்தது ஆச்சரியமாக உள்ளது. அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இன்னொரு பக்கம் கேஎல் ராகுல் வருவார் என்றும் எதிர்பார்க்கவில்லை.
இதன் மூலமாக வீரர்கள் அல்லது அணி நிர்வாகங்கள் தனி பாதையில் பயணிக்க முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று புரிகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரின் மிக முக்கிய வீரரான தோனி மீண்டும் சிஎஸ்கே அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார். 2 சீசன்களுக்கு முன்னால் தோனி மிக மோசமாக பேட்டிங்கில் செயல்பட்டிருந்தார். ஆனால் கடந்த சீசனில் எப்படி கம்பேக் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவரால் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இன்னிங்சை விளையாட முடியும் என்று அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டினார். அதேபோல் தோனியை அனைத்து போட்டிகளிலும் விளையாட வைக்கும் முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்காது. நிச்சயம் சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நினைக்கிறேன். 2 சீசன்களுக்கு முன்பாக தோனியின் கால்களில் காயம் ஏற்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தோனி எந்த அணிக்காக விளையாடினாலும் அவர் தான் ஆலோசகர், அவர் தான் கேப்டன். பிளேயிங் லெவனில் இருந்தாலும், இல்லையென்றாலும் அவரின் முடிவு தான் இறுதியானது. அதனால் சென்னை அணிக்கு தோனி தான் மிக முக்கியமான வீரர். அதற்கு தோனியின் தலைமைப் பண்பு மிக முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
