இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதன் மூலம் 103 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து., தனது 2-வது இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்தியா 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட., மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. சான்ட்னெர் வீசிய அபார பந்து வீச்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் சான்ட்னெர் 2 இன்னிங்சையும் சேர்த்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
