‘கூட்டுறவு கொண்டாட்டம்’: தமிழக அரசின் தீபாவளி சிறப்பு தொகுப்பு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை மறுநாள் (அக்டோபர்.28) முதல் நடைபெறவுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘உறவுகள் ஒன்று கூடி நிறைவுபெற்று, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீப ஒளித்திருநாளான தீபாவளியாகும். அத்தகைய தீபாவளியினை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை நாளை மறுநாள் (அக்டோபர்.28) முதல் நடைபெறவுள்ளது.
இந்த மளிகை பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு, பிரீமியம் மற்றும் எலைட் என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிரீமியம் தொகுப்பில் துவரம் பருப்பு – 200கிராம், உளுத்தம் பருப்பு – 200 கிராம், கடலை பருப்பு – 200கிராம், வறுகடலை (குண்டு) – 100 கிராம், மிளகு – 25 கிராம், சீரகம் – 25 கிராம், வெந்தயம் – 50 கிராம், கடுகு – 50கிராம், சோம்பு – 50 கிராம், நீட்டு மிளகாய் – 100 கிராம், தனியா – 100கிராம், புளி – 100கிராம், ரவை – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், எலைட் தொகுப்பில் துவரம்பருப்பு – 250 கிராம், உளுத்தம் பருப்பு – 250 கிராம், கடலை பருப்பு – 250கிராம், வறு கடலை (குண்டு) – 200 கிராம், மிளகு – 50 கிராம், சீரகம் – 50 கிராம், வெந்தயம் – 50 கிராம், கடுகு – 50 கிராம், சோம்பு – 50 கிராம், நீட்டு மிளகாய் – 250 கிராம், தனியா- 200 கிராம், புளி – 100கிராம், ரவை – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
அது மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகையை தமிழர்கள் அளவிற்கு சிறப்பாக கொண்டாடுபவர்கள் யாவரும் இல்லை. தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தை பிடிக்கின்றதோ அதேபோல இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பில் பச்சரிசி மாவு – 500 கிராம், பாகு வெல்லம் – 500கிராம், ஏலக்காய் – 5கிராம், மைதா மாவு – 500கிராம், சன்லெண்ட்/கோல்ட்வின்னர் சன் பிளவர் ஆயில் (Sunland/Goldwinner Sunflower Oil) -1/2லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ.190/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தொகுப்புகள் அனைத்து வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டியைகை கொண்டாடி மகிழ கேட்டுக்கொள்கிறேன்.’
இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
