தொப்புள் கொடி வீடியோ விவகாரம்: மருத்துவத்துறைக்கு இர்பான் அளித்த கடிதம்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.
குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை, 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு வந்ததும் அவரிடம் பதில் பெறப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே இர்பான் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக காவல் துறை சார்பில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்பான் விளக்க கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அந்த கடிதம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும்., மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்துள்ளார்.
