தூத்துக்குடியில் பெண்களுக்கான பூங்கா : கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9.91 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம், நடுநிலைப்பள்ளி கட்டிடம், பூங்காக்கள், நடைபயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்,. விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலை வகித்தார், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமை தாங்கினார்,
விழாவில் கனிமொழி எம்பி பேசியதாவது:-
இன்றையதினம் மகளிருக்கான பூங்காவினை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகளிருக்கான பூங்கா என்பது பெண்களுக்கென்று ஒரு தனி இடமாக உள்ளது. எந்தஒரு அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக பெண்களுக்காக பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய இடமாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து பேணக்கூடிய இடமாகவும் இந்த மகளிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு மகளரிருக்கான பூங்கா தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்படும்.
இந்த மகளிர் பூங்காவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரி ஒர்க், எம்ராய்டிங் ஒர்க், சிறுதானிய உணவு வகைகள் தயாரித்தல், ஓவியப் பயிற்சி, விளையாட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்வது, நகை செய்தல், அழகு கலைப் பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் புனித சிலுவை மனையியல் கல்லூரி மூலமாக நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் தி.கலைச்செல்வி, மேற்கு மண்டலத் தலைவர் கோ.அன்னலட்சுமி, தெற்கு மண்டலத் தலைவர் ஆ.பாலகுருசாமி, முதன்மை செயல் அதிகாரி (என்.எல்.சி) க.அனந்த ராமனுஜம், மாமன்ற உறுப்பினர்கள், துணை மாநகரப் பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
