கழக கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்: தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கை திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழ போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்க போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்ட போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.
உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு. உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றி கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழக கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.
உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றி கொள்கைகளை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
