மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மருதுபாண்டியார் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாயை முன்னிட்டு மதுரையில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தி வரை ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவை 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
