பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுகிறது; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னையில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. பிஜேபி அரசுக்கு திமுக ஊது குழலாக செயல்படுகிறது, பாஜக மெஜாரிட்டியாக இல்லாத காரணத்தால் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பாஜகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், பாஜகவின் ஆட்சி கவிழ்ந்து விடும். அது போன்ற நேரத்தில் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க, நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம் என்று திமுக பிஜேபிக்கு ஆதரவு அளிக்கும் என்று சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ் குமாரையும் மிரட்ட திமுகவை பிஜேபி பயன்படுத்தி வருகிறது,.
திமுகவினர் மீது அமலாக்கப்பிரிவு சோதனை , வருமான வரி மற்றும் சிபிஐ விசாரணை உள்ளிட்டவை இல்லாத பட்சத்தில் பாஜகவிற்கு திமுகவினர் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர்., இதை மறைக்க தான் அவ்வப்போது, அடிப்பது போல் அடிப்பதும், அழுவது போல் அழுவதுமாக இருவரும் நடிக்கிறார்கள்., திமுக என்ன சொன்னாலும் தற்போது பாஜக கேட்கும்.
இதன் அடிப்படையில் தான் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாற்றம் இருக்கும் பட்சத்தில் திமுக பாஜகவிடம் சொல்லித்தான் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எங்கள் ஆட்சியில், காவல்துறை விவகாரங்களில் எப்போதுமே நாங்கள் தலையிடுவதில்லை. ஆனால் இப்போது காவல்துறையில் ஆளுங்கட்சியின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் தவறு செய்பவர்களும், காவல் துறையை ஏளனமாக நினைப்பவர்களும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்து வருகிறது.
அதிமுகவில் சாதாரண கொடி பிடிக்கும் தொண்டன் கூட கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பிற்கும், அதேபோல் அரசு பொறுப்பிற்கும் வர முடியும். எப்போதும் சொல்வது போல உதயநிதிக்கு அரசியலில் பக்குவம் இல்லை. அதற்கு உதாரணமாக நேற்று அவர் அதிமுகவில் சில பெயர்களை குறிப்பிட்டு, அவர்களெல்லாம் ஏன் பொதுச்செயலாளர் ஆகவில்லை, முதல்வர் ஆகவில்லை என்று கேட்டார். ஆனால், அவர் சொல்லிய பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செம்மலை ஆகியோர் எம்.எல்.ஏ கூட கிடையாது. அவர்களை எப்படி முதல்வராக்குவது. தரவுகளை சரிபார்க்காமல் பேசும் இவரெல்லாம் நமக்கு துணை முதல்வர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
