இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரபல யூடியூபர் இர்பான், தனது யூடியூப் சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இர்பான், தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இர்பானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவத்துறையும் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார்.
இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவியின் பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று, தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அதை வீடியோவாக அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இர்பானின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில், இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
இர்பான் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது;
“குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். இர்பான் மற்றும் அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இர்பானின் செயல் மன்னிக்க கூடியது அல்ல, கண்டிக்க கூடியது. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்” என்றார்.
