கோவில்பட்டி அருகே விவசாய நிலத்தில் செத்துக்கிடந்த 14 மயில்கள்

கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆங்காங்கே மயில்கள் செத்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நில உரிமையாளர் மற்றும் அந்த பகுதியினர் கிணற்றிலும் சில மயில்கள் இறந்து கிடந்ததை கண்டனர். சில மயில்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தன.
இது பற்றி வனத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர்/ மொத்தம் 14 மயில்கள் இறந்து போய் இருந்தது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய மயில்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருக்கிறது. இதை தின்பதற்காக மயில்கள் வந்து இருக்ககூடும் என்றும் அளவுக்கு அதிகமாக மக்காச்சோளத்தை தின்றதால் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதனால் இறந்து கிடந்த அனைத்து மயில்களும் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
