வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: வருகிற 23-ந் தேதி பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
பின் அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்,பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர்.பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போவது யார். என்பதை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் வருகிற 22-ந் தேதி கேரளா வருகிறார். மறுநாள் 23-ந்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறுகிறது.
