‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற விவகாரத்தில் சிக்கினார். இதனிடையே ஸ்ரீநாத் பாசி தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
தற்போது எர்ணாகுளத்தில் காரில் சென்றபோது, அவரது கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது பஹீம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் நடிகர் ஸ்ரீநாத் பாசி சம்பவ இடத்தில் தனது காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதுகுறித்து எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அந்த வழக்கில் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அலுவலர் தற்காலிக ரத்து (சஸ்பெண்டு) செய்தார். அவரது ஓட்டுநர் உரிமம் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
