தமிழக அரசின் நடவடிக்கையால் வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாறி உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு, முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும்,பெரிய பாதிப்பு இல்லை. தமிழக அரசின் நடவடிக்கையால் தண்ணீர் தேங்காமல் வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாறி உள்ளது.
கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 முதல் 20செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
அதிகனமழை பெய்த போதிலும் சென்னையில் 4 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் அடையாற்றில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.
பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறது. இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர். தமிழக அரசின் பணியை மக்களே பாராட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.
