மசூதியில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவது மத நம்பிக்கையை புண்படுத்தாது: கர்நாடக ஐகோர்ட்டு

கர்நாடக மாநிலத்தில் மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷங்களை எழுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அத்துமீறி நுழைந்தது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்,மத நம்பிக்கையைப் புண்படுத்தியது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக காவல்துறையினர் பதிவு செய்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிடுவது எந்த மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து-முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் .அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையை புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் .மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும். என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
