கனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்காமலும், அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமலும் தரிசனம் செய்வதற்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன முறை அமலில் உள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், முக்கியமான விழா காலங்களின்போதும்,பேரிடர் காலங்களின்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப பிரேக் தரிசனத்தை ரத்து செய்வது வழக்கம்.
ஆந்திராவில் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருமலை மற்றும் திருப்பதியில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், நாளை (16.10.2024) வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அக்டோபர்15-ம் தேதி இன்று பரிந்துரை கடிதங்கள் பெறப்படாது என்றும். பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
