கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாட்கால் நட்டல் நிகழ்ச்சி

திருப்பூவனம், திருமங்கை நகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி என்றெல்லாம் சிறப்பித்து கூறப்படும் கோவில்பட்டி திருத்தலத்தில் அன்னை செண்பகவல்லி பூவனநாதருடன் அருளாட்சி செய்கின்றாள். இங்கு அன்னை செண்பகவல்லியின் அருள் காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு அன்னையின் பொற்பாதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது.
இறைவன் இறைவியின் திருக்கல்யாணத் திருவிழாவானது அன்னை உலகத்தை காத்தற் பொருட்டு இறைவனை வேண்டி தவம் இயற்றி அவன் அருளை உலகத்தில் வாழும் உயிர்கள் பெறும்படி செய்தல் ஆகும். இறைவன் சிவமும் சக்தியுமாய் இயங்கி உயிர்களுக்கு ஏகபோக வாழ்வினை அளித்தருளி அம்மையப்பனாய் எல்லா உயிர்களையும் காத்தருளுகின்றார். அவர் உயிர்கட்கு தவமியற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு தவமுதிர்வில் காட்சி கொடுப்பதும் இறைவன் பேரின்பம் அளிக்கிறார் என்பதை அறிவுறுத்தற் பொருட்டு தந்தையாய் திருக்கோலக்காட்சி கொடுப்பதும் உயிர்களோடு இரண்டறக் கலந்து பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற்பொருட்டு திருமணச் சடங்குகள் நிகழ்வதும் திருக்கல்யாண விழாவாக திகழ்கின்றன.
இவ்வாறு உயர்ந்த தத்துவக் கருத்துக்களை உணர்த்தும் இறைவன் இறைவியின் திருக்கல்யாணத் திருவிழா வருகிற ஆம் 18.10.2024 வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா தொடங்கி 29.10.2024 செவ்வாய்கிழமை முடிய நடைபெற உள்ளது ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு
நாட்கால் நட்டல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4 30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது,
காலை 5 30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருநாட்கால் நட்டல் நடைபெற்றது. இதில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,செயல் அலுவலர் வெள்ளைச்சாமி,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
