• June 8, 2025

துப்பாக்கிகள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு

 துப்பாக்கிகள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-‘

 “1959 ஆம் ஆண்டு இந்திய படைக்கலச் சட்டத்திற்குட்பட்டும், அதன் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 2016 ம் ஆண்டு படைக்கல விதிகளின் படியும், தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் படைக்கல உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து உரிமதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை:

படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2024 உடன் முடிவடையும் படைக்கல உரிமதாரர்கள் அவர்களது ஒற்றைக்குழல். இரட்டைக்குழல் துப்பாக்கி. எஸ்.பி.எம்.எல், டி.பி.எம்.எல், ரைபிள். ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்க 01.01.2025 முதல் 31.12.2029 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாளுக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நடுவர் அவர்களுக்கு மனுக்களை அசல் உரிமத்துடன் கீழ்க்கண்ட கட்டணத் தொகையினை “02202-Director General of Police (Acct Code :005500104AB22738)” என்ற தலைப்பின் கீழ் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் இ-செலான் மூலம் செலுத்தி. விண்ணப்பத்தில் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) மதிப்புடைய நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி விண்ணப்பத்தோடு உரிமம், அசல் செலுத்துச் சீட்டு(இ-செலான்) ஆகியவற்றை சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

பிஸ்டல், ரிவால்வர் – 2500.00 

.22 போர் ரைபிள் (.22 Bore Rifle) மற்றும் தோட்டா ரக துப்பாக்கிகள் (S.BB.L / D.B.B.L)  2500.00

நிரப்பு ரக துப்பாக்கி Breech loading centre fire rifles (S.B.M.L/D.B.M.L) 2500.00

சென்டர் /பயர் ரைபிள் (Centre Fire Rifles) 5000.00

மேற்கண்ட படைக்கலச் சட்ட உரிமங்களை 2025, 2026, 2027, 2028 மற்றும் 2029 ஆகிய ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து புதுப்பித்து கொள்ள வேண்டும். அந்த வகைக்கு மேற்குறிப்பிட்ட கட்டணத் தொகையினைச் செலுத்த வேண்டும்.

புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கு அனுப்பும் பொருட்டு உரிமதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் சரியான அஞ்சல் முகவரி (உரிமத்தில் உள்ளபடி) மொபைல் எண், கதவு எண், தெரு பெயர், கிராமம், வட்டம், அஞ்சல் பின்கோடு எண் ஆகிய விபரங்களை முழுமையாக கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்தோடு பணம் செலுத்திய செலான் பிரிந்து போகதாவாறு இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிமதாரர் மட்டுமே கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் முகவரிக்கான ஆதாரம் (ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல்) மற்றும் புகைப்படம் இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்.

படைக்கல உரிமத்தின் செயல்திறன் 31.12.2024 உடன் முடிவடையும் படைக்கல உரிமதார்ர்கள் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாளுக்குள் தங்களது உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவில்லையெனில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1 ஆம் நாளன்று தன்னிடமுள்ள படைக்கலனை அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ அல்லது படைக்கல காப்புக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தினரிடமோ ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட உரிமம் வைத்திருப்பவர் மீது படைக்கலச் சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தாமதமாக பெறப்படும் மனுக்களின் பேரில் எவ்வித காரணம் கொண்டும் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது. 

புதுப்பித்தலுக்கு விண்ணப்பம் செய்யும் காலம் முடிய உரிமங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நேரடி பரிசீலனைக்கு பின் உரிமதாரருக்கு அத்தியாவசிய தேவையெனக் கருதப்படும் இனங்களில் புதுப்பித்து வழங்கப்படும்.

இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *