பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா

பெண்கள் 9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதில் கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், தஹிலா மெக்ராத் 32 ரன்களும், எல்லிஸ் பெரி 32 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று விளையாடி அரைசதமடித்தார். வெற்றிக்கு அருகில் கொண்டுவந்தும் அவரால் இந்திய அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று இரவு நியூசீலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இவ்விரு அணிகளின் வெற்றி,தோல்விகளை பொறுத்து இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
