‘’இந்தியாவுக்காக நடித்தேன்’’ மனம் திறந்த ரிஷப் பண்ட்

கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலக கோப்பையை கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி வென்றது. அத்தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஹன்றி க்ளாஸென் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதனால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது என்பதால் இந்தியா தோற்கும் நிலைக்கு சென்று விட்டது.
அப்போது முழங்காலில் லேசான காயத்தை சந்தித்ததாக சொன்ன ரிஷப் பண்ட் அதற்காக முதலுதவி எடுப்பதற்காக சில நிமிடங்கள் போட்டியை நிறுத்தினார். அதுவே தென்னாப்பிரிக்காவின் பக்கம் வேகமாக சென்று கொண்டிருந்த போட்டியை தங்கள் பக்கம் திருப்பியதாக சமீபத்தில் ரோஹித் சர்மா கூறியிருந்தார். ரிஷப் பண்ட் சாதூரியமாக செய்த அறிவுப்பூர்வமான செயல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்நிலையில் உலக கோப்பை இறுதிப்போட்டியில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய ரிஷப் பண்ட், “நான் என் பிசியோவிடம் முடிந்தவரை நேரம் கடத்த சொல்லி கேட்டு கொண்டேன். நாம் சிறிது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் உன் முழங்கால் நன்றாக இருக்கிறதா என்று கேட்டார். அதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது. நான் சும்மா நடிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்” என்று தெரிவித்தார்.
ரிசப் பண்ட் உலக கோப்பையில் 171 ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
