கோவில்பட்டி பள்ளி பற்றி சர்ச்சை வசனம் : வேட்டையன் திரைப்படத்தை ஒளிபரப்ப எதிர்ப்பு -போராட்டம்


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து
இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.கோவில்பட்டி நகரை களங்கப்படுத்தும் வகையில் நடைபெறாத சம்பவத்தை நடைபெற்றதாக வேட்டையன் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி நகர் தொடர்பாக இடம் பெற்றுள்ள காட்சியை நீக்க
வலியுறுத்தியும் , அந்த திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்வம் தலைமையில் தங்கள் பகுதியைவும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் ஒளிபரப்ப விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்
தமிழ் பேரரசு கட்சி
இதற்கு இடையே தூத்துக்குடி மாவட்ட தமிழ் பேரரசு கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி பள்ளி கல்வி,ஒழுக்கம் ஆகிய இரண்டிலும் சிறந்த பள்ளி, இந்தப் பள்ளியில் ஆர்வமுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஆபாசமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் காணொளி காட்சியை பரவ விட்டதாக ஒரு வாசகம் வருகிறது.
சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளியை அவமானப்படுத்தும் வகையிலும், பொய்யான தகவலை பரப்பும் வகையிலும் இந்த காட்சி அமைந்துள்ளது, உடனடியாக இந்த காட்சியை நீக்க வேண்டும், மேலும் இந்த காட்சியை வைத்த அந்த திரைப்படத்தை இயக்குனர் நடிகர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் 2009 2010 ஆம் ஆண்டில் சிறந்த நகராட்சி உயர்நிலைப் பள்ளி என தமிழக அளவில் விருது பெற்ற பள்ளி
2014-2015 ஆம் ஆண்டில் சுகாதாரம. மற்றும் சுற்றுப்புற தூய்மையில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி இன்று வரை பத்தாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சியினை பெற்று வருகிற பள்ளி இத்தனை சிறப்பிற்குரிய இந்த பள்ளியை கொச்சைப்படுத்தும் விதமாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் சேர்த்து இழிவு படுத்துகிற பொய்ச் செய்தியை பெரிய ஊடகமாக இருக்கிற திரைப்படத்தில் காட்டி இருப்பது வேதனையினை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிட்டு வேண்டுமென்றே கொச்சைப்படுத்துகிற செயலைச் செய்திருக்கிற வேட்டையன் திரைப்பட இயக்குனரும் நடிகரும் மன்னிப்பு கேட்பதோடு குறிப்பிட்ட அந்த திரைப்படக் காட்சி அந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும் அவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
