ராகுல்காந்தி , சந்திரபாபு நாயுடுவுடன் துரை வைகோ எம்.பி.சந்திப்பு

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி, டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்த்தித்தது பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பத்தாவது:-
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த நான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான அன்புக்குரிய திரு ராகுல் காந்தி அவர்களை சந்தித்து என் மகள் மணவிழா அழைப்பிதழ் அளிக்க விரும்பினேன். அவரை சந்திப்பதற்கும் நேரம் கேட்டேன்.
காஷ்மீர் , அரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ராகுல் அவர்களை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் 9 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சந்திக்கலாம் என்று அழைப்பு வந்தது. டெல்லியில் எண்:10, ஜென்பத் சாலையில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நண்பகல் 12 மணிக்கு அவரைச் சந்திப்பதற்கு சென்றேன்.
அரியானா ,காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான தலைவர்கள்,காங்கிரஸ் நிர்வாகிகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவர்களை சந்திக்க காத்திருந்தனர்.இருந்தாலும் 12 மணி அளவில் எனக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த ராகுல் காந்தி நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ உடல் நலன் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.
முதலில் அவருக்கு காஷ்மீரில் வெற்றிக் கனியைப் பறித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை, திராவிட இயக்க அரசியல் பற்றி எல்லாம் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்..ஈழத் தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படும் போக்குகள் குறித்தும் கருத்துக்களை கவலையுடன் பகிர்ந்து கொண்டார்..என் மகள் திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்ததும் மகிழ்ச்சிப் பொங்க எங்கள் குடும்பத்தை பற்றியும், மகன் ,மகளைப் பற்றியும் கேட்டறிந்தார்.
டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழ் அளித்தேன். நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ உடல் நலனை விசாரித்தார். தமிழக அரசியல் நிலைமை குறித்தும், மறுமலர்ச்சி திமுக செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.
