ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே திருட்டில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது

தூத்துக்குடியில் சமீப காலத்தில் பூட்டி கிடக்கும் வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றில் கொள்ளை நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பதூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பார் மதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று அதிகாலையில் மில்லர்புரத்தில் உள்ள நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து சிசிடிவி கேமரா , பென் டிரைவ் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றபோது தனிப்படை போலீசாரிடம் ஓருவர் சிக்கி கொண்டார்.
இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தைச் மொய்தீன் என்பதும், அவர் தூத்துக்குடி மில்லர்புரத்தில் செயல்பட்டு வரும் ஷிப்பிங் கம்பெனியில் டிரைவராக இருப்பதாக தெரிய வந்தது.
மொய்தீன் பகலில் டிரைவராக வேலைக்கு செல்லும் பொழுது பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவதும், இரவில் வீடுகளுக்கு சென்று கொள்ளை அடிப்பதையும் தொடர்கதையாக கொண்டிருந்தார் என்பதும் ஏற்கனவே, கடந்த மாதம் 21 ம் தேதி இரவு டூவிபுரம் 5வது தெருவில்’ இரண்டு வீடுகளில் தங்க நகைகளையும் வெள்ளிப்பொருட்களையும், ஜூலை மாதம் 24ம் தேதி மில்லர்புரம் பள்ளிவாசல் தெருவில் ஒரு வீட்டில் தங்க நகைகளையும், ஏப்ரல் மாதம் 9ம் தேதி சிதம்பர நகர் 3வது தெருவில் உள்ள வீட்டில் ரூபாய் 1 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 96 கிராம் தங்க பொருட்களையும், 465 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது திருச்சி வேலூர் கோவை மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட தமிழக முழுவதும் சுமார் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறபபடுகிறது.
