சென்னையில் மீண்டும் போலீஸ் என்கவுண்ட்டர் ; கைதான ரவுடி சுட்டுக்கொலை

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
குறிப்பாக, 5 முறை குண்டர் தடுப்பு காவலிலும் சீசிங் ராஜா அடைக்கப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற 3-வது என்கவுண்ட்டர் இதுவாகும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேளச்சேரி பார் ஊழியரை மிரட்டிய வழக்கு தொடர்பாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பாகவே ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் வைத்து அவரை நேற்று கைது செய்தோம்.
வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சீசிங் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதில் காவல்துறை வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ரவுடி சீசிங் ராஜாவை சுட்டதில் அவர் உயிரிழந்தார். நாங்கள் விசாரிக்கவே கைது செய்தோம்; அவர் தாக்கியதால்தான் என்கவுண்ட்டர் செய்யும் சூழல் உருவானது.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சீசிங் ராஜாவை ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. 10-க்கும் அதிகமான வழக்குகளில் சீசிங் ராஜா மீது பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
