• June 8, 2025

உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி: தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி: தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை  நடைபெற்றது.

இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.

.இந்த விழாவில் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை வழங்கிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் பதவி, புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த உதயநிதி,  “அதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். தொண்டர்கள் அவர்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும், எல்லா அமைச்சர்களும் முதல்-அமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று கூறினார்.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரை தாண்டி, பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *