சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு

சென்னை எழும்பூர் – ராமேசுவரம் இடையே தினமும் இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 23 பெட்டிகளை கொண்டது.
வழக்கம்போல ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயிலானது நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சிலர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கழன்று ஓடிய பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். இதையடுத்து 20 நிமிடம் தாமதமாக ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. சேது எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 பெட்டிகள் கழன்று ஓடிய சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
