பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்

]தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஹீரோயினாகவும், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் இணைந்த நடித்தவருமான பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84
சி.ஐ.டி. சகுந்தலா பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்
ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார்.
1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் பின்னணி நடனக் கலைஞராக கால் பதித்த நடிகை சகுந்தலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்களுக்காக சகுந்தலா அறியப்பட்டார். சி.ஐ.டி சங்கர் (1970) படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக இவர் நடித்தார். அதன் பிறகு இவரை ‘சி.ஐ.டி சகுந்தலா’ என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினார்.
எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின் என்ற பெருமை பெற்றவர் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பொன்மானை தேடி’. அதன்பின்னர், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.
சி.ஐ.டி.சகுந்தலா மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
