• June 8, 2025

மதுரை தங்கும் விடுதியில் தீவிபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு

 மதுரை தங்கும் விடுதியில் தீவிபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு


மதுரை பெரியார் பஸ்  நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் வெளியூர்களில் இருந்து மதுரை வந்து வேலை பார்க்கும் பெண்கள்  மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் தங்கி உள்ளனர்.

இன்று i அதிகாலை 4 மணியளவில் விடுதியில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

தீவிபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து, தீயில் சிக்கியிருந்த 5 பெண்களை மீட்டனர். இதில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தை சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து ‘சீல்’ வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், “முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

 தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


.இது தொடர்பாக  விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

_____

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *