அரசு விழாவில் கே.பி.முனுசாமியை பங்கேற்க விடாமல் தடுத்த திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் பி.எம்.ஜி.எஸ்.ஒய் (PMGSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
