படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவர்கள் மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் போது இடைநின்ற மாணவர்களுக்கான “உயர்வுக்குப்படி” வழிகாட்டல் நிகழ்ச்சியானது 11.9.2024 (இன்று)அன்று தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல்களையும், தங்கள் கல்வி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சமூகநலத்துறை அலுவலர் ஆகியோர் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை மற்றும் உறைவிட வசதி குறித்த விவரங்களை தெரிவித்து மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளனர்.
வங்கிகளில் இருந்து கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு வங்கிக்கடன் வழங்க முன்னோடி வங்கி மேலாளர் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்.பள்ளி கல்வியில் இடைநின்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய குறுகிய கால தொழிற்பயிற்சி, தொழில்முனைவோராக உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி, குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை திறன் மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் வழங்க உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
