`மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம்’ கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னையில் பேட்டி

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்த அவர், பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார். ” என்று தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில்,” கூட்டணி கட்சி என்பதால் அமைச்சர் உதயநிதியை சந்தித்தேன். உதயநிதி உடனான சந்திப்பு நட்பு ரீதியாக இருந்தது. மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம்” என்றார்.
