• June 7, 2025

சிட்கோ கட்டிடங்கள் அனுமதி பிரச்சினை: கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

 சிட்கோ கட்டிடங்கள் அனுமதி பிரச்சினை: கோவில்பட்டி அருகே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசு சிட்கோ அமைக்க முடிவு எடுத்து கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சி எல்லைக்குள் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்தது. இதற்கான அனுமதி குலசேகரபுரம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது..

தற்போது இதில் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், சிட்கோ வளாகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அருகே உள்ள லிங்கம்பட்டி ஊராட்சியில் அனுமதி பெற அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை குலசேகரபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பார்வையிட அமைச்சர் ஐ.பெரியசாமி வருவதாக இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் திரண்டு அமைச்சரிடம் முறையிட வந்தனர்.

ஆனால் அமைச்சரின் வருகை ரத்து என தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள், சிட்கோ கட்டிடங்களுக்கு தங்களது ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் சி.முரளிதரன் தலைமையில் கிராம மக்கள் அங்குள்ள காளியம்மன் கோயில் வளாகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அ.லெனின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை, போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனால், வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வரவேண்டும் என்றனர். இதன் காரணமாக மதிய உணவு தயாரித்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ராமராஜன் நேரில் வந்து, பிரச்சினை தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்டு கிராம மக்கள், இந்த பிரச்சினை முடியும் வரை கலைஞரின் கனவு இல்லத்திட்டப் பணிகள் நடைபெறக்கூடாது என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *