மரக்கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு;கோவில்பட்டி அருகே உறவினர்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே கழுகசலபுரத்தில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலையில் தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாசிலாமணி (55) என்ற தொழிலாளி பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் அங்கு இருந்த மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாசிலாமணி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த மாசிலாமணி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் 1 மணிக்கு சாலையில அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேரம் ஆக சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன, கோவில்பட்டி – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தடைபட்டது..
இது பற்றி அறிந்ததும் அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தீப்பெட்டிஆலை நிர்வாகத்துடன் பேசி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறியல் 3 மணிக்கு கைவிடப்பட்டது.
