65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பெரம்பூரில், திரு. வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு, புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளருமான டி. ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
.ஒரு முதலாளித்துவ அரசு கோடீஸ்வரர், பெரும் பணக்காரர்களுக்காக நடத்தப்படுவது தான் பார்முலா 4 கார் பந்தயம். ஏற்கனவே அரசு இந்த கார் பந்தயத்திற்கு ரூ.48 கோடி செலவழித்தது, அதையும் திருப்பித் தரவில்லை. இது பார்முலா 4 ரேஸா? அல்லது நாய் ரேஸா என்பது தெரியவில்லை. ஒரு நாய் உள்ளே புகுந்து ஒரு மணி நேரம் அவர்களுக்கு தண்ணீர் காட்டியுள்ளது.
எப்ஐஏ சான்றிதழ் முன்பே வாங்க வேண்டும் அல்லவா ஏன் முன்பே வாங்கவில்லை… தகுதி சுற்றிற்கு மட்டும் ரூ.1700 ல் இருந்து 17000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு 10 ஆயிரம் பேரிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணம் போச்சு.
இது குறித்து விளையாட்டு துறையோ அல்லது அரசோ தெளிவுப்படுத்தவில்லை. இந்தப் போட்டிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணம் யாருக்கு செல்கிறது..
இன்னும் சில தினங்களில் நாம் பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். ஆனால் அதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த துறைகளும் கார் பந்தயத்தில் மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இனியாவது இந்த அரசு திருந்துமா என்றால் திருந்தாது
முதலமைச்சர் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஏன் காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும் அனைவரும் கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள் அது தேவையற்றது. கார்பந்தயத்திற்கு போடப்பட்டிருந்த சாலைகள் கூட முறையாக போடப்படவில்லை ஆங்காங்கே பேட்ச் ஒர்க்குகள் செய்யப்பட்டுள்ளது… மாணவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தி விட்டாலே போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க முடியும்.. இன்றைக்கு போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது என்றால் அதற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம்..
பிஎம்ஸ்ரீ குறித்து கடந்த பிப்ரவரி மாதமே தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது ஆனாலும் இந்த துக்ளக் அரசுக்கு அது தெரியவில்லை இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது போல நடிக்கிறார்கள்.. திமுக அரசு பொறுத்த வரை மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் சரக்கு விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறார்கள்..
18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் பொய் சொல்கிறார் பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா கிட்டத்தட்ட 65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் வாய் கூசாமல் இவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறார்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
