கோவில்பட்டியில் `இதயம் காப்போம் முகாம்’ செப்டம்பர் 1-ந் தேதி நடக்கிறது

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள ஏ.வி.மேல்நிலைப்பள்ளியில் செப்டம்பர் 1 -ந் தேதியன்று திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இதயம் காப்போம் முகாம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை முகாம் நடக்கும். இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்வர். முதலில் பொதுவான பரிசோதனை, தொடர்ந்து இ.சி.ஜி. பரிசோதனை செய்து இதய நோய் கண்டறியப்படும். தேவைப்படுவோருக்கு எக்கோ டெஸ்ட் எடுக்கப்படும்.
முகாமில் பங்கேற்பவர்கள் ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம், செல்போன்(91235 00362) நம்பருக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமிற்கு வரும்போது ஆதார் அட்டை, காப்பீடு அட்டை போன்றவை கொண்டு வரவேண்டும். மேலும் ஏற்கனவே சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ குறிப்புகளையும் கொண்டு வரவேண்டும்.

முகாம் நடைபெறும் இடத்துக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட இதய பாதுகாப்பு ஊர்தி கொண்டு வரப்படுகிறது. அதில் பதிவு பெற்ற மருத்துவர், செவிலியர், எக்கோ, இ.சி.ஜி. தொழில்நுட்ப நிபுணர்கள் இருப்பார்கள் .
முகாம் ஏற்பாடுகளை கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் தாமோதரக்கண்ணன், செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் கிருஷ்ணசாமி, இணை செயலாளர் பி.எம்.பழனிகுமார் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
